திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சேதுராபட்டி ஊராட்சி குஜிச்சியம்பட்டி செங்குளம் குளத்தில் தொடர்ந்து கிராவல் மண் அள்ளியதால் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல இன்றும் மண் ஏற்றி செல்வதற்காக 3 லாரிகள் அந்த வழியாக வந்தன. இதனை பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, அந்த 3 லாரிகளையும் சிறை பிடித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.