பொங்கல் பண்டிகை: தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் 1 மணி நேரத்திற்கு முன்னதாக இயக்கம்…!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் முன்னதாக புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13, 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண் 06091) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாம்பரம்- திருச்சி இடையே ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டுக்கு பிற்பகல் 2.58 மணிக்கும், மேல்மருவத்தூருக்கு பிற்பகல் 3.23-க்கும், விழுப்புரத்துக்கு மாலை 5.15-க்கும், விருத்தாசலத்துக்கு மாலை 6.13-க்கும், அரியலூருக்கு இரவு 7 மணிக்கும். ஸ்ரீரங்கத்துக்கு இரவு 7.53-க்கும், திருச்சிக்கு இரவு 8.35-க்கும் சென்றடையும். திருச்சியிலிருந்து இரவு 8.45-க்கு புறப்படும் ரயில் திண்டுக்கல், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, சேரன்மகாதேவி வழியாக முன்னர் அறிவிக்கப்பட்ட நேரப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.