நெல்லை மாவட்ட காவல்துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்பீர் சிங். இவர் ஏ.எஸ்.பியாக பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடுங்கி கொடூரமான தண்டனை வழங்கி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி,பாப்பாக்குடி போன்ற காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பற்களை பிடுங்கியதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற நபரை அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்து பிரச்சனையை செய்ததன் காரணமாக ஏ.எஸ்.பி பல்பீர் சிங் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அவர்களது பற்களை துடிதுடிக்க பிடுங்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தற்போது சிறிய பிரச்சனை செய்ததாக கூறி அவர்களது பற்களையும் உடைத்து தற்போது அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில இளைஞர்களின் பற்களை உடைத்து அவரது வாயில் ஜல்லிகற்களை போட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறும்போது:- ஒரு வழக்கிற்காக அம்பாசமுத்திரம் போலீசார் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது ஏ.எஸ்.பி சார் கையில் கையுறை அணிந்து கொண்டும் டிராக் பேண்ட் அணிந்து கொண்டும் அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லிக்கற்களை போட்டு கொடூரமாக அடித்தார். மேலும் கற்களை வைத்து பல்லை உடைத்தார் எனது அண்ணன் மாரியப்பனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறான். எங்களுக்கு நடந்ததை போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று தெரிவித்தனர் .ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலமை விசாரணை அதிகாரியாக நியமித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் விசாரணை தீவிரம் அடைந்தது.
முதற்கட்டமாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது மனித உரிமை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், மனித உரிமை ஆணையமும் விசாரணையை துவக்கி இருக்கின்றது.
