Rock Fort Times
Online News

பெண்களை குறி வைத்து ஆபாச படங்கள் அனுப்பியவரை வளைத்தது காவல்துறை- * போலீசாருக்கு பயந்து பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிவு…

மயிலாடுதுறையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவெறும்பூர் பகுதியில் தங்கி இருந்து அரசு போட்டி தேர்வு எழுத தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். அவருடைய செல்போன் எண்ணிற்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது. அவர், அழைப்பை எடுத்துப் பேசியபோது எதிர்முனையில் பேசிய ஆண் ஒருவர் அந்த இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்பி இருக்கிறார். அந்தப் பெண் சம்பந்தப்பட்ட நபரின் எண்ணை பிளாக் செய்தும், வாட்ஸ் அப் காலில் வந்து மீண்டும் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுசம்பந்தமாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க வலை விரித்தார். அப்போது அந்த இளம் பெண்ணை பார்ப்பதற்காக வேங்கூர் பகுதிக்கு அந்த நபர் வந்துள்ளார். அந்த நபரை பிடிக்க போலீசார் முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த நபர் அந்த பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதில் அவரது கால் உடைந்தது. பின்னர் அவரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது நாமக்கல் மாவட்டம், தாழையூர் மாங்குடிபட்டியை சேர்ந்த சித்தன் (48) என்பது தெரியவந்தது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது தனக்கு கிடைத்த செல்போன் எண்கள் மூலம் பலரை தொடர்பு கொண்டு பேசியதும் , அவர்களில் பெண்கள் யாராவது பேசினால் அவர்களிடம் ஆபாசமாக பேசுவதும், அவர்களது எண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்புவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்தது. அதுபோலத்தான் இளம்பெண்ணிடமும் ஆபாச படங்கள் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் சித்தன் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்