சென்னைக்கு அடுத்து பெரிய விமான நிலையமாக திருச்சி மாறி வருகிறது. நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விரைவில் பார்சல்( கூரியர்) சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கு முன்பு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கூரியர் செல்ல குறைந்தது மூன்று நாட்கள் ஆனது. புதிய கூரியர் சேவை டெர்மினல் செயல்படத் தொடங்கியதும், மருந்துப் பொருட்கள் ஒரே நாளில் சிங்கப்பூர் சென்றடையும். இதன்மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக பார்சல் அனுப்ப முடியும். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள 46 நாடுகளுக்கு விரைவாக பார்சல் அனுப்ப முடியும். 2 மாதத்திற்குள் இந்த சேவை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் எஸ். ஞானேஸ்வர ராவ் கூறுகையில், திருச்சி கூரியர் சரக்கு முனையம் 2023-ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் செயல்படாமல் இருந்தது. தற்போது அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இரண்டு மாதங்களுக்குள் சேவையைத் தொடங்குவோம். தற்போது, திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கூரியர் செல்ல குறைந்தது மூன்று நாட்கள் ஆகிறது. ஆனால், விமான நிலைய கூரியர் டெர்மினல் செயல்படத் தொடங்கியதும், ஒரு நாளில் சிங்கப்பூர் சென்றடையும் என்று கூறினார். இந்த சேவை குறித்து எக்ஸ்பிரஸ் கூரியர் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் எஸ்.ஏ. சையது கூறுகையில், புதிய சேவை தொடங்கப்படுவதன் மூலம் கூரியர் கட்டணம் குறைவதோடு, பார்சல் சென்று சேரும் நேரமும் குறையும். விமான நிறுவனங்கள் சரக்கு இட ஒதுக்கீட்டில் கூரியர் சேவைக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்குவார்கள். தற்போது பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளுக்கு பிறகு மீதமுள்ள இடத்தையே நாங்கள் பயன்படுத்துகிறோம். 30 கிலோ வரை எடையுள்ள கூரியர்களை அனுப்பலாம். திருச்சி விமான நிலையம் வழியாக நேரடியாக அனுப்பும்போது, கட்டணம் 30 சதவீதம் வரை குறையும். தற்போது வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு தனியார் கொரியர் சேவை மூலம் தான் பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது என்றார். தற்போது, திருச்சியிலிருந்து பெங்களூரு, சென்னை வழியாகவே கொரியர் சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.