மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல். பாஜக ஓபிசி பிரிவு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இன்று(15-02-2024) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று அவரை முந்தி சென்று வழி மறித்துள்ளது. இதனால், தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு சக்திவேல் தப்பியோட முயன்றார். ஆனால், அந்தக்கும்பல் சக்திவேலை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. அதன் பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை அண்ணாநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்?, எதற்காக அவரை கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மேற்கு தாம்பரம் அருகே பாஜக எஸ்.சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மதுரை பாஜக நிர்வாகி சக்திவேல் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.