திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் கோலாகலம்- மார்ச் 30ம் தேதி தேரோட்டம்…!
திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்த விழா ஏப். 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பங்குனித் தேரோட்டத்துக்காக சுவாமி சந்நிதியைச் சுற்றியுள்ள 3-ம் பிரகாரத்தில் அஷ்டதிக்கு திசையில் (எட்டுத்திக்கு) நடப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்று விழா இன்று (25.03.2025) காலை மிதுன லக்னத்தில் நடைபெற்றது. அப்போது கொடிமரம் முன்பு சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். மாலை 6 மணியளவில் ஏகசிம்மாசனத்தில் சோமாஸ்கந்தருடன் சுவாமியும், அம்மனும் புறப்பட்டு 4-ஆம் பிரகாரத்தை வலம்வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர். 2-ம் நாளான 26-ம் தேதி புதன்கிழமை சுவாமி சூரிய பிரபையிலும், அம்மன் சந்திர பிரபையிலும், 3-ஆம் நாளான 27-ம் தேதி வியாழக்கிழமை சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாளான 28-ம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5-ம் நாளான சனிக்கிழமை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பனை ஓலைகளால் வேயப்பட்ட சப்பரத்தில் தனித்தனியாக எழுந்தருளி தெருவடைச்சானாக 4-ஆம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான 6-ம் நாளான 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனித் தேரோட்டம் காலை 7.20-க்கு நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி பெரிய தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் வே.சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.