Rock Fort Times
Online News

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி இதுதொடர்பாக முறையாக மனு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஆணையர்( பொறுப்பு) ராமரிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என மனு அளிக்கப்பட்டது. மனுவில் இப்பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு இங்கு வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற கொடிய நோய்கள் உருவாகும் என்றும், ஆகவே இதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர் ராமர், விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும், இதுகுறித்து மேலிடத்திற்கு தகவல் அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்