Rock Fort Times
Online News

உதகையில் தோட்டக்கலைத் துறையினர் போராட்டம் விஸ்வரூபம் – ஒரு பெண் பலி! மேலும் சிலர் கவலைக்கிடம்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு மயங்கி விழுந்த தோட்டக்கலைத்துறை பெண் ஊழியர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையில் பணிபுரியும் பூங்கா பணியாளர்கள் கடந்த 23-ம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட 3 பெண்கள் மயக்கமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அங்கம்மாள் என்பவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதைத்தொடர்ந்து தோட்டக்கலை இணை இயக்குநர் கருப்புசாமி, துணை இயக்குநர் ஷிபிலா மேரி, டிஎஸ்பி பி.யசோதா, வட்டாட்சியர் ராஜசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களில் மேலும் 4 பேர் நேற்று மயக்கமடைந்தனர். அவர்கள் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே, கடந்த 10-ம் தேதி மயக்கமடைந்த மேலும் ஒரு பெண்ணின் உடல் நிலையும் மோசமாக உள்ளது. பெண் தொழிலாளர்கள் பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்படுகின்றனர். எனவே, விபரீதங்கள் ஏற்படும் முன்னதாக, இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பூங்கா போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் போஜராஜன் கூறும்போது; “ஊதிய உயர்வு உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 27 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். இதுகுறித்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இங்குள்ள எம்.பி., அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எங்களது கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது, சாதகமான பதில் வரும் என்று வாய்மொழியாகத்தான் கூறுகின்றனர். இவ்வளவு நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஓர் உயிர் போனபிறகும், எங்களது கோரிக்கைகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. நியாயமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம். இறந்த பெண் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். உதகை தாவரவியல் பணியாளர்களின் தொடர் போராட்டத்தில் ஒரு பெண் நேற்று இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்