பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு…!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (17-09-2025) திருச்சிக்கு வருகை தந்தார். சென்னையிலிருந்து விமானத்தில் கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா நிகழ்ச்சிக்காக வந்த அவர், திருச்சி விமான நிலையத்திலிருந்து ரோடு ஷோவாக புறப்பட்டார். வழியெங்கும் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்த அவர், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மேஜர் சரவணன் ரவுண்டானா, கலெக்டர் அலுவலக சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முதல்வர், அங்கு மேடையில் நடைபெற்ற சமூக நீதி உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் உறுதிமொழியை வாசிக்க, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், ரகுபதி, எம்.பி.க்கள் கனிமொழி, சிவா, ஆ.ராசா, அருண் நேரு, துரை வைகோ, கலெக்டர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் அதனை திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் வழக்கமாக நடைபெறும் சமூக நீதி நாள் உறுதி நிகழ்வு, முதன்முறையாக தலைநகருக்கு வெளியே திருச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.