அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் பகுதிசபா கூட்டம்…!* 27 -வது வார்டில் மேயர் மு.அன்பழகன் பங்கேற்பு…!
பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான இன்று (15.09.2025) திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி 5-வது மண்டலத்துக்குட்பட்ட 27 -வது வார்டு சவேரியார் கோவில் தெரு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்துக்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில், சவேரியார் கோவில் தெரு, ஆட்டுமந்தை தெரு, மீன்கார தெரு, மல்லிகைபுரம், ஜெனரல் பஜார், வண்ணாரப்பேட்டை, பென்சனர் தெரு, விஸ்வப்ப நாயக்கன் பேட்டை, ரெங்கநாதபுரம், மூலைக்கொல்லை தெரு , தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் உறுதி அளித்தார். முன்னதாக, 27 வது வார்டு பகுதிகளில் முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் மேயர் எடுத்துரைத்தார். இதேபோல மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
Comments are closed.