கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினர் திடீரென சிறை பிடித்து அவற்றில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்டுள்ளனர். மேலும், பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை நிறுத்துவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தன. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து இயக்கத்தையும் நிறுத்துவதாக தமிழக அனைத்து ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் திடீரென சிறை பிடிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த 7 நாட்களாக கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை நிறுத்தியுள்ளனர். மேலும், ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதிக்கின்றனர். மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ’ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி’ தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள். எனவே, நாங்களும் வசூலிக்கிறோம் என அண்டை மாநிலங்கள் காரணம் தெரிவிக்கிறார்கள். இந்த திடீர் நடவடிக்கையால் ஆபரேட்டர்கள் வரியும், அபராதங்களும் என இரண்டையும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு (90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூ.1,50,000. AITP சாலை வரி ரூ.90,000 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக ரூ.2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூ.4,50,000 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்தப் பிரச்சினையில் நவ.10 மாலை 5 மணி முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரியில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவின் எல்லா விஷயங்களிலும் முன்னோடியாக செயல்படும் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்கு அளித்து அண்டை மாநிலங்களுக்கு சீராகப் பேருந்துகள் இயக்க வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அதில் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.