Rock Fort Times
Online News

இவருடன் கூட்டணிக்கு யாரும் வர மாட்டார்கள்: இபிஎஸ்.ஐ ஒருமையில் பேசிய த.வெ.க.நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வருத்தம்…!

கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா. அரசியலில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அரசியலில் அவரது ஆர்வம், கட்சிப்பணி போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட திருமாவளவன் அவருக்கு கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி அழகு பார்த்தார். ஆதவ் அர்ஜுனாவும் கட்சிப் பணிகளில் விறுவிறுப்பாக செயல்பட்டார். திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிலும் அவரது பணி மெச்சும்படியாக இருந்தது.இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில்  பங்கேற்ற ஆதவ் அர்ஜுனா, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற திரியை கொளுத்தி போட்டார். அவரது இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது இந்த பேச்சால் திருமாவளவன் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என விசிக நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதன் காரணமாக கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் “சஸ்பெண்ட்” செய்து திருமாவளவன் நடவடிக்கை மேற்கொண்டார்.பின்னர், அக்கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.அங்கு சென்ற பின்னரும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர்ற மாதிரி தெரியவில்லை”என அவர் பேசிய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த அதிமுகவினர் பலர் அதிர்ச்சி அடைந்தனர். எங்கள் தலைவரைப் பற்றி பேசுவதற்கு இவர் யார்? என்று ஆதவ் அர்ஜுனாவை பொரிந்து தள்ளி வருகின்றனர். இந்தநிலையில் தனது பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், “எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும். அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்