Rock Fort Times
Online News

இந்தியா கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம்- திருச்சியில் செல்வப் பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. இன்று(26-05-2025) காலை திருச்சி புத்தூரில் அமைந்துள்ள சிவாஜி சிலைக்கு நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநில பொருளாளர் ரூபி மனோகரன்
எம்.எல்.ஏ, திருச்சி மாவட்டத் தலைவர்கள் எல்.ரெக்ஸ், கலை, வக்கீல் கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில செயலாளர்கள் ஜி.கே.முரளி, வக்கீல் சரவணன், கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, ஐ.டி. பிரிவு அரிசி கடை டேவிட், ஜி.எம்.ஜி. மகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், கலைப்பிரிவு அருள், சமூக நலப்பேரவை சோனா ராமநாதன், சிவாஜி மன்றம் உறந்தை செல்வம், பிரபு மன்றம் ஆர்.சி.ராஜா, சண்முகராஜா, சிவாஜி பெரியதம்பி, வெங்கட்ராமன், நாராயணசாமி, காட்டூர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர், செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

திருச்சியில் சிவாஜி சிலையை திறந்த முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். இந்த நிதியாண்டில் தான் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொண்டால்தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுகிறார்கள். இது சர்வாதிகாரம். காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கூறினார். இருந்த போதும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்பட்டது. பா.ஜ.க. தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கிறது. மாநிலங்களுக்கான கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற மாட்டோம், எதுவாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தால் எதற்காக மத்திய அரசு?. பா.ஜ.க.விற்கும், அதிமுகவிற்கும் வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள். பெரியார் தன்னுடைய ஜாதி அடையாளத்தை துறந்தவர். ஆனால் ஜாதி அடையாளத்தோடு யுபிஎஸ்சி தேர்வில் கேள்விகள் வைப்பது தமிழ்நாட்டை கலவர பூமியாக்கும் பா.ஜ.க வின் திட்டத்தின் வெளிப்பாடே. ஆர்எஸ்எஸின் அஜெண்டாவை தான் அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. இது உறுதியான கூட்டணி, தமிழ்நாட்டைக் கடந்து தேசத்தை பாதுகாக்கும் கூட்டணி. இந்த கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்