12-ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலை படிப்பில் மாணவர்கள் எந்த துறையிலும் சேரலாம் யு.ஜி.சி. புதிய விதிமுறைகள் வெளியீடு
இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்காக மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மாநில குழு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பட்டப்படிப்புகளுக்காக குறைந்தபட்ச கல்வி தகுதி தொடர்பாக வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக, 12ம் வகுப்பு அல்லது நிலை 4ல் ஒரு மாணவர் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையிலும் சேர முடியும். அதே நேரம், தான் சேர விரும்பும் துறையில், தேசிய அளவிலான அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் அவர் வெற்றி பெற வேண்டும். இதேபோல, இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையில் படித்த ஒரு மாணவரும், சம்பந்தப்பட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்றால் முதுகலையில் எந்த துறையையும் தேர்ந்தெடுக்க முடியும். நிறுவனங்களின் கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகளை பொறுத்து, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை மாணவர்களை இளங்கலை 2-ம், 3-ம் மற்றும் 4-ம் ஆண்டுகளில் நேரடி சேர்க்கை நடத்தலாம். இதே போல, முதுகலை பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு நேரடியாக அனுமதிக்க முடியும். மேலும் பாடத்திட்டம் மற்றும் கடன் கட்டமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவு, நிறுவனம் மற்றும் கற்றல் முறை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகளை தொடரலாம் என்றும் பல்கலைக்கழக மானிய குழுவில் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் அதிக நெகிழ்வுத் தன்மையை அறிமுகப்படுத்துவதுடன், ஒழுங்குமுறை கடின தன்மையை நீக்கி மாணவர்களுக்காக உள்ளடக்கம் மற்றும் பலதரப்பட்ட கற்றல் வாய்ப்புகளை வழங்கும் என பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது., யு.ஜி.சி புதிய விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் கடந்த கால கல்வித்தகுதியை பொருட்படுத்தாமல் எந்த ஒரு துறையிலும் படிக்கலாம். இந்த சீர்திருத்தங்கள் மூலம் இந்திய உயர் கல்வியை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதை உறுதி செய்கிறோம் என்று அவர் கூறினார்.

Comments are closed.