தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் உருவானாலும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தான் மகத்தான வெற்றி பெறும்…- அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சி, அண்ணா அறிவியல் மையம், கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (செப்.22) திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மேயர் மு .அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காட்சிக்கூடத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சமீபத்தில் த.வெ.க தலைவர் விஜய், “திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி மாவட்டம் வளரவில்லை” என குற்றம் சாட்டினார். திருச்சி எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பது குறித்து திருச்சியில் வாழக்கூடிய மக்களுக்கு தெரியும். நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை திருச்சியில் நிறைவேற்றி உள்ளோம். வெளியிலிருந்து வந்தவர்களுக்கு அது தெரியாது. தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் உருவானாலும், வருகிற 2026 ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் தான் இரண்டாவது முறையாக முதல்வராக வருவார். வெளிநாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜெபல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களுடைய தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது. அந்த தொழிற்சாலை தொடங்கிய பின்பு வேலைவாய்ப்பு பெருகும் என கூறினார்.

Comments are closed.