அரசு கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்! சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்!
அரசு கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் பரிசீலனை நடத்தி அங்கு கல்லூரிகள் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சட்டப்பேரவை வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தங்கள் தொகுதியில் அரசு கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “முன்னாள் அமைச்சரே முதலமைச்சர் மீது கொண்ட நம்பிக்கையில் தான் இந்த கோரிக்கையை வைக்கிறார் “என்றார். “வருங்காலத்தில் தேவை ஏற்பட்டால் அதன் அடிப்படையில் அவருடைய கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று அமைச்சர் பொன்முடி கூறினார். தொடர்ந்து பேரவை உறுப்பினர்
பிச்சாண்டி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ஏற்கனவே 46 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் அரசு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த பகுதிகளில் கல்லூரி அமைப்பது பற்றி பரிசீலனை மேற்கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். 27 விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி கேள்வி எழுப்பிய திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் இடைநிலை ஊழியர் கடைநிலை ஊழியர்,என குறிப்பிட்ட சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார். இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டால் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு பெற உதவியாக அமையும் என்று அவர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.ஸ். ஆர். ராமச்சந்திரன், “முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
