காலை உணவு திட்டத்தில் ரூபாய் 154 கோடியில் புதிய சத்துணவுக் கூடங்கள்! மானிய கோரிக்கையில் அமைச்சர் பெரியசாமி தகவல்!
இன்று சட்டசபையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கை நடந்தது. அதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். ஊரக பகுதிகளில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவு கூடங்கள் 154 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். 2023-24-ம் ஆண்டில் “முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 1500 கி.மீ நீளமுள்ள சாலைகள் 500 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகள் பயன்படுத்தி அமைக்கப்படும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்கள் திட்ட பணிகளை திறம்பட கண்காணிக்க 224 புதிய வாகனங்கள் இருபது கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலர்கள், செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும் உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பணிகளை திறம்பட கண்காணிக்க ஏதுவாக 224 புதிய வாகனங்கள் இருபது கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும் என்றாா்.