மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோயில்களில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகாமக பெருவிழா. இந்தாண்டு மாசிமக விழாவையொட்டி கும்பகோணம் சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் உள்ளிட்ட 3 கோயில்களில் கடந்த 26-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.நேற்று வரை பல்வேறு வாகனங்களில் தாயாருடன் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. முக்கிய விழாவான மாசி மகத்தையொட்டி இன்று காலை சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் கோயில்களில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சக்கரராஜா, சக்கரராஜா என முழக்கமிட்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இந்தத்தேரோட்டத்தில் கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை, க.அன்பழகன், மயிலாடுதுறை இணை ஆணையர் சு. மோகனசுந்தரம், மாநகர துணை மேயர் சு.ப. தமிழழகன்,கோயில் செயல் அலுவலர் ச.சிவசங்கரி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனா். மேலும் இப்பெருவிழாவிற்க்க காவல் ஆய்வாளர்கள் அழகேசன் மற்றும் சிவ. செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
