கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 19ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு காரில் சென்றார். அங்கு அவர் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். காரை தங்கும் விடுதியின் அருகே நிறுத்தி இருந்தார். காலையில் வந்து பார்த்தபோது காரை காணாதது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் குமரவேல் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில், 2 நபர்கள் கள்ளச்சாவி போட்டு காரை திறந்து எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகளை வைத்து காரை திருடி சென்றதாக தஞ்சை மாவட்டம் திருவையாரை சேர்ந்த கோபிநாத், அகஸ்டின் ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காரை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் இருவர் மீதும் பல்வேறு மாவட்டங்களில் பைக் மற்றும் கார் திருடிய வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.