திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள குப்பனம்பட்டியில் மதுரை வீரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடந்தது. இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கைப் பொருட்கள் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3-12-23 மாலை கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கோவில் முன்பாக உள்ள சாமி வேலை பிடுங்கி உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு தப்பி சென்றுவிட்டார். சற்று நேரத்தில் கோவில் பூசாரி கோவிலுக்கு விளக்கு போட வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.பின்னர் கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் கோவிலுக்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில், மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இதுபோன்று சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோயில்களில் அடிக்கடி திருட்டு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகவே, இந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.