Rock Fort Times
Online News

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் 6 மாதத்தில் கசந்தது : திருச்சி ஆசிரியை தற்கொலை…!

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டையை அடுத்த எட்டரை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கஜப்பிரியா (35). இவர், ஜீயபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். முகநூல் நட்பு (பேஸ்புக்) மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த காவலர் கார்த்திக் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர், தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருக்காட்டுப்பள்ளி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், 6 மாதத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கஜப்பிரியா கணவனை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு கஜப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர், கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்ததை கண்டு மகளை பலமுறை அழைத்துள்ளனர். ஆனால், வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் பிணமாக தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கஜப்பிரியா உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி மேல் விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன கஜப்பிரியாவும், காவலர் கார்த்தியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கார்த்தியை விட கஜப்பிரியாவுக்கு வயது அதிகம் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்