திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் பராமரிப்பு குறைபாடு: அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு…!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி வருகை தந்தார். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் முடிவுற்ற பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், கோவிலில் உள்ள யானை குளியல் தொட்டி, யானை தங்குமிடம், நந்தவனம், தங்கத்தேர், கோவில் பிரகாரம் முழுவதும் சுற்றிப் பார்த்தார்.அப்போது சில குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்து அதிகாரிகளை கடிந்து கொண்டார்.இந்த மாதம் இறுதியில் மீண்டும் வருவேன் அப்போது அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என எச்சரித்தார். தொடர்ந்து கோவில் யானை அகிலாவுக்கு பழங்களை வழங்கி மகிழ்ந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏழு மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்த திருவானைக்கோவில் தமிழகத்தின் பொக்கிஷமாக உள்ளது.அதனைப் போற்றி பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதனை செய்து வருகிறோம். திருவானைக்காவல் கோவிலில் பார்க்கிங் வசதி மேற்கொள்வதற்கு சவாலாக இல்லை. ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகாமையில் குடியிருப்புகள் மற்றும் வணிகர்கள் இருப்பதால் சவால் நிறைந்ததாக இருக்கின்றது. இருப்பினும் அனைத்து தரப்பட்ட பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை தொடர்ந்து செய்து வருகின்றோம் என்றார். அதனைத் தொடர்ந்து அந்தநல்லூர் ஒன்றியம் பழூரில் உள்ள விஸ்வநாதர் திருக்கோவில், உத்தமர் திருக்கோவில், திருப்பஞ்சீலி நீலிவனநாதர் திருக்கோவில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Comments are closed.