திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழபெருங்காவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மழவனூர் கிராமத்தில் எழுந்தருளி உள்ள பிரசித்திபெற்ற பெரியகாண்டியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக மே 9ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, யாக சாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. இன்று (12-05-2025) காலை 7 மணிக்கு யாக சாலையில் இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர், காலை 9 மணி அளவில் காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை மேளதாளம் முழங்க எடுத்துச்சென்று வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க 9.30 மணிக்கு மேல் கோவிலின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மூலவர் பெரியகாண்டி அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் மழவனூர் மற்றும் கீழபெருங்காவூர் ஊராட்சியை சுற்றியுள்ள பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கும்பாபிஷேகத்திற்கு வருகை புரிந்தவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Comments are closed.