திருச்சி மாநகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி 53வது வார்டு ஒத்தக்கடை குதுபாபள்ளம், 50 -வது வார்டு மேலப்புதூர் வேர்ஹவுஸ் ஆகிய இரண்டு இடங்களில் தலா ரூ.2.5 கோடி வீதம் மொத்தம் ரூ 5 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மாநகர மக்களிடத்தில் வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தூர் ஆபீசர்ஸ் காலனி, பர்மா காலனி ஆகிய பகுதிகளில் சாலையோர திறந்தவெளி நூலகங்களையும் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த நூலகங்களுக்கு தினமும் பலரும் வந்து பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் திருச்சி மாநகரில் பாலக்கரை துணை நீரேற்று நிலையம் (வேர்ஹவுஸ் மேம்பாலம் அருகில்) மற்றும் குதுப்பாபள்ளம் சமுதாய கூடம் ஆகிய இடங்களில் அறிவுசார் மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் கட்டுமான பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அதிகாரிகளுடன் சென்று, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் துர்கா தேவி உதவி கமிஷனர் அக்பர் அலி சண்முகம் கவுன்சிலர்கள் மண்டி சேகர், கலைச்செல்வி ரிஸ்வானா ஹமீது சுரேஷ் செயற்பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன் லோகநாதன், இளநிலைபொறியாளர் ராஜா திமுக வட்டச் செயலாளர் தனசேகரன் மற்றும் அதிகாரிகள் பணியாளர்கள் உடன் இருந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியதாவது:- இந்த இரு அறிவுசார் மையங்களும் தலா 4 ஆயிரம் சதுர அடியில் மொத்தம் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுக்குத் தேவையானவை உட்பட பல்வேறு நூல்கள் வைக்கப்படவுள்ள இந்த நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தில் இணையதள வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் எவ்வித இடையூரும் இல்லாமல் அமைதியான சூழலில் படிப்பதற்கு உதவும் நோக்கில் இந்த மையங்கள் கட்டப்படவுள்ளன. விரைவில் பணிகளை முடித்து அறிவுசார் மையத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரதிட்டமிடப்பட்டுள்ளது .இவ்வாறு மேயர் அன்பழகன் கூறினார்.
