கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று( மே 14) சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கவாய்க்கு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் பி.ஆர்.கவாய்( 65). கடந்த 1985ல் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்த கவாய், மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 1992ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2003ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005ல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். 2019ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார். பண மதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய அமர்வில் இவரும் ஒருவர். தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.
Comments are closed.