Rock Fort Times
Online News

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு…!

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இன்று (ஜூன் 16) பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதி கே.சுரேந்தரை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 2022 ம் ஆண்டு
தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சுரேந்தர் 22,622 வழக்குகளை முடித்து வைத்துள்ளார். நீதிபதியாக பொறுப்பேற்கும் முன் தில்சுக் நகர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகள், சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சுரேந்தர் பணியாற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் நீதிபதி சுரேந்தரை வரவேற்றுப் பேசினர். ஏற்புரையாற்றிய நீதிபதி சுரேந்தர், அரசியல் சாசனத்திற்கும், நீதித்துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக கற்றுக் கொள்ளும் ஆவலுடன் வந்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும், இடமாற்றம் என்பது புதிய துவக்கம் என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி சுரேந்தருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்