Rock Fort Times
Online News

‘விஜய் கோட்டையில்’ கே.ஏ.செங்கோட்டையன் ஐக்கியம்…!

அதிமுக ஒன்றிணையாவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை என்று அதிரடியாக பேசியதுடன் பிரிந்து சென்றவர்களை 15 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்கள் ‘கெடு’ விதித்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். இதனால், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேவர் குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் ஒன்றாக சென்று முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கை கோர்த்ததால் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏ.வாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் இருந்தவர் செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தில் அதிக செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்துவரும்அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக தகவல்கள் அடிபட்டன. தி.மு.க.வும் வலை விரித்தது. இதற்காக அவர் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் இன்று(27-11-2025) தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், மற்றொரு நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிலையில் கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்கு அந்தக்
கட்சியில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்