தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் 281 காலியிடங்கள்: ரூ. 50,000 மேல் மாத சம்பளம்
இதற்கான விண்ணப்பப் படிவத்தை palanimurugan.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்அருள்மிகுபழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழும் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், நேர்காணல் மூலம் மட்டுமே நியமனங்கள் நடைபெற உள்ளன.
காலிப்பணியிடங்கள்: ஆட்சேர்ப்பு அறிவிப்பில் நான்கு பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தட்டச்சர், நூலகர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய வெளித்துறை பிரிவின் கீழ் 174 இடங்களும், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 இடங்களும்; நாதஸ்வரம், தவில் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும்; ஆசிரியை, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளின் கீழ் 19 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பதவிக்குமான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட அறிவிப்பில் (ஆட்சேர்ப்பு அறிவிப்பு) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601″ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
