திருச்சி நம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார் கோவில் பசுமை நகர் பகுதியில் வசித்து வருபவர் குமரன்(வயது 50). மெடிக்கல் ரெப்ரஸண்டேட்டிவ். இவரின் மனைவி வளர்மதி. தன் மனைவியை ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டு பணிக்கு சென்றுள்ளார். இரவு 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பதட்டத்துடன் வீட்டிற்குள் நுழைந்த அவர் பீரோவை பார்த்தபோது அது எப்போதும் போல பூட்டப்பட்டு இருந்தது. அவர் எப்போதும் பீரோவை பூட்டிவிட்டு அதன் சாவியை டி.வியின் மேல் உள்ள பிளாஸ்டிக் டப்பாவில் வைப்பது வழக்கம். டப்பாவை அவர் பார்த்த போது அதில் பீரோ சாவி இல்லை. இதுகுறித்துஅவர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது. கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.