Rock Fort Times
Online News

அடுத்தவர்களுக்கு தெரியாமல் உதவி செய்வதையே விரும்பும் இயேசு

குருவிக்கு கூடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் தோப்புக்கே விளம்பரம் செய்யும் மனநிலையே இன்று மக்களிடம் நிரம்பியிருக்கிறது. ஏழைக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்தைவிட, நான் தர்மவான் என்று காட்டிக்கொள்வதையே இன்றைய சமூகம் விரும்புகிறது.

எல்லோருமே இறைவனின் பிம்பங்கள் தான். இறைவனின் படைப்பில் வேறுபாடு இல்லை. ஏழையின் இதயத்துக்கும், பணக்காரரின் இதயத்திற்கும் இடையே இறைவன் படைப்பில் வேறுபாடு காட்டவில்லை. உனக்கான நாளுக்கு 24 மணி நேரமென்றால், ஏழைக்கும் அதுதானே. உனக்கான சூரியனும், ஏழைக்கான சூரியனும் ஒன்றுதான். இறைவன் அனைத்தையும் பொதுவில் வைக்க, மனிதன் மட்டும் பொதுவையும் தனக்குள் பதுக்கினான். இல்லாதவர்கள் குறைந்தவரும் அல்ல. இருப்பவர்கள் பெரியவரும் அல்ல. இந்த வாழ்க்கை முடிவில், வங்கி கணக்கின் அடிப்படையில் பேரின்ப வீடு ஒதுக்கப்படுவதும் இல்லை.

ஏழைக்கு உதவி செய்வது உயரிய பண்பு. ஆனால் அதை மனிதாபிமானத்தின் வாஞ்சையோடு செய்ய வேண்டும். உதவி செய்வதால் மகிழும் மனம் இருக்க வேண்டும். உதவி என்பது பிறர் அறியாமல் செய்ய வேண்டியது. வலது கை செய்யும் உதவி இடது கைக்குகூட தெரியக்கூடாது என பைபிள் அறிவுறுத்துகின்றது. நாம் ஊருக்கே விளம்பரம் செய்துதான் நாலு பேருக்கு பருத்திகள் கொடுக்கிறோம். விளம்பரம் செய்யும் காசை வைத்து 100 பேருக்கு நல்லது செய்யலாம்.

உண்மையான உதவி என்பது முதலில் ஏழைகளை ஏழைகளாக பார்க்காமல் சக தோழர்களாய் பார்ப்பதுதான். அவர்களை எந்த வகையிலும் தன்னைவிட குறைந்தவர்களாக பார்க்காமல் இருப்பது முதல் தேவை. அவர்களுக்கு தேவை நமது பொருளாதாரப் பகிர்தல் மட்டுமல்ல. அன்பையும் பகிர்ந்து, அவர்களோடு நாமும் இணைந்திருக்கிறோம் என நினைத்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். ஒருவருக்கு உதவி தேவை எனில், அவர்களுடைய இருப்பிடத்திற்கே சென்று ரகசியமாய் கொடுத்து வாருங்கள். உங்களுடைய பயணத்தின் எண்ணிக்கை முக்கியமல்ல. உங்களின் மனநிலையும், எண்ணங்களுமே முக்கியம்.

உள்ளதை கொடுப்பதும், அவர்களுக்கு உங்கள் உள்ளத்தை கொடுப்பதும் தான் மிகவும் அவசியமானது. பிறருக்கு உதவக்கூடிய அளவுக்கு இறைவன் நம்மை வைத்திருக்கிறார் எனில், அது மிகப்பெரிய வரம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

நம்மிடம் உதவி கேட்டு வருபவர்கள், நமது மனதின் இரக்கத்தை அளந்து பார்க்க இறைவனால் அனுப்பப்பட்டவர்கள். நம்மிடமிருப்பது தர்மமா? கருணையா? என்பதை கண்டறிந்து ஆண்டவருக்கு சொல்பவர்கள். நம் உதவியை எதிர்பார்ப்பவர்கள் நமது உயிரின் பாகங்கள். அவர்கள் நமது சகோதரர்கள், சகோதரிகள். அவர்கள் இந்த மண்ணில் நம்மோடு பயணிப்பவர்கள். எனவே அவர்களை அரவணைப்போம். அவர்களை கனிவுடன் நோக்குவோம். ஏழைக்கு செய்த உதவியெல்லாம் எனக்கு செய்த உதவியே என்கிறார் இயேசு கிறிஸ்து.

1 Comment
  1. Nguyet Dockett says

    I enjoy the efforts you have put in this, thankyou for all the great articles.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்