தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று ( 13.04.2023 ) காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அப்போது, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியின் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர் தமிழரசியை கேள்வி கேட்க சபாநாயகர் அழைத்தார். அப்போது அவையில் உறுப்பினர்கள் பேச்சு இரைச்சல் கேட்டது. இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு, “உறுப்பினர்கள் பேரவையில் அமைதியாக இருங்கள். கேள்வி என்ன, பதில் என்ன என்று கொஞ்சம் கவனியுங்கள். இது கேளிக்கை விடுதி இல்லை, சட்டமன்றம். யார் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கக் கூடிய இடம்” என்று கடிந்து கொண்டார். முன்னதாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றார். நேரடி ஒளிப்பரப்பில் எதிர்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனக்கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு நிற மாஸ்க் அணிந்து அவையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

