‘எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாதிரி தெரியல’- இபிஎஸ்.ஐ ஒருமையில் பேசிய த.வெ.க.நிர்வாகி ஆதவ் அர்ஜுனா… (வீடியோ இணைப்பு)
கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா. அரசியலில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அரசியலில் அவரது ஆர்வம், கட்சிப்பணி போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட திருமாவளவன் அவருக்கு கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி அழகு பார்த்தார். ஆதவ் அர்ஜுனாவும் கட்சிப் பணிகளில் விறுவிறுப்பாக செயல்பட்டார். திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிலும் அவரது பணி பேசும்படியாக இருந்தது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவர் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும் என்று கருதிய திருமாவளவன், அந்த விழாவில் பங்கேற்காமல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை அனுப்பி வைத்தார். அந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்று பேசினார். அவரது இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது இந்த பேச்சால் திருமாவளவன் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். நேற்று வந்தவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் தலைவரிடம் எடுத்துரைத்ததோடு அவரை கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். விளைவு! கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் “சஸ்பெண்ட்” செய்து திருமாவளவன் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, கடந்த ஜனவரி மாதம் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அங்கு சென்ற பின்னரும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர்ற மாதிரி தெரியவில்லை” என அவர் பேசிய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த அதிமுகவினர் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எங்கள் கட்சி, எங்கள் தலைவரைப் பற்றி பேசுவதற்கு இவர் யார்? என்று ஆதவ் அர்ஜுனாவை பொரிந்து தள்ளி வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணிக்கு பல கட்சிகள் வருவார்கள் என்று எடப்பாடி பழனிசாமியும், நைனார் நாகேந்திரன் சொல்லி வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு கட்சியின் தலைவர் விஜய் என்ன ரியாக்க்ஷன் கொடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. நம்மை விமர்சிப்பவர்கள் விமர்சித்து விட்டு போகட்டும், யாரையும் நாம் பதிலுக்கு விமர்சிக்க வேண்டாம், நமது இலக்கை நோக்கி பயணிப்போம் என்று விஜய் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளை இட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.