சமீப காலமாக திருச்சியை மையமிட்டு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வரிசையாக மெயில்கள் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் பேசிய மர்ம நபர்கள், பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து சுதாரித்த திருச்சி மாநகர காவல் துறை, வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து குறிப்பிட்ட பள்ளிகளில் சல்லடை போட்டு சோதனை நடத்தியது. ஆனால், அந்த சோதனைகளில் எந்தவிதமான வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை.மிகச் சமீபத்தில் திருச்சி காவிரி ஆற்றில் இருந்து இரண்டு ராக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றப்பட்டது. அது எப்படி அந்த இடத்திற்கு வந்தது?
யாராவது புதைத்து வைத்திருந்தார்களா? என்பது போன்ற விசாரணையில் இறங்கினார்கள் போலீசார். ஆனால் அது பற்றிய எந்த விபரமும் இதுவரை முறையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இன்றிரவு ( டிச.24 ) 9 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தொடர்ந்து சிஐஎப் வீரர்களுடன் இணைந்து விமான நிலையம் முழுவதும் இன்ச் பை இன்ஞ்சாக சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கும்பகோணத்தை சேர்ந்த நிசார் அகமது என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இப்படி திருச்சியில் செயல்படும் பள்ளிகள்,விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களை டார்கெட் செய்து பரப்பப்படும் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் புரளியா? இல்லை எதிர்காலத்தில் திருச்சியை டார்கெட் செய்து நாச வேலைகளை அறங்கேற்றுவதற்கான முன்னோட்டமா? என்பது குறித்து போலீசார் முறையான விசாரணை நடத்தி, சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.