கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). ஏமன் நாட்டில் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்த இவர், அதேநாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த வழக்கில் 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்தோவுடன் இணைந்து நிமிஷா பிரியா ஏமனில் மருத்துவமனை தொடங்க திட்டமிட்டிருந்ததாகவும் அதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்த வழக்கை விசாரித்த ஏமன் கோர்ட்டு, 2020-ம் ஆண்டு நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனையை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏமன் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவருக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டது. இதற்கிடையே நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய அவரது தரப்பினர் மற்றும் இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. அதேவேளை, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காந்தபுரம் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் கிராண்ட் முப்தி அபூபக்கர் முசலியார் தலையீட்டை தொடர்ந்து நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏமனில் கேரள நர்சு நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் கிராண்ட் முப்தி அபூபக்கர் முசலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தனிநபர்கள் கூறும் தகவல்களில் உண்மையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments are closed.