Rock Fort Times
Online News

குழந்தைகள், பெண்களிடம் யாராவது வாலாட்டினா தட்டி தூக்கிருவோம்-* பிங்க் நிற ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார் திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐ. பி.எஸ்…

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், 312 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட 80 இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் நவம்பர் 11ம் தேதி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் ரோந்து பணிக்காக இந்த புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்ட 7 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை மாநகர காவல் ஆணையரக வளாகத்தில், இன்று (17.11.2025) மாநகர காவல் ஆணையர் ந.காமினி பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர், இளஞ்சிவப்பு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அனைவரும் ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டுமென்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டு மென்றும் அறிவுரை வழங்கினார்.
திருச்சி மாநகரில் உள்ள கண்டோன்மெண்ட், பொன்மலை, கேகேநகர், ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட், தில்லைநகர் ஆகிய 6 காவல் சரகங்களில் தலா 1 வாகனமும்,  பஞ்சப்பூர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை கண்காணிக்க 1 வாகனம் என மொத்தம் 7 இடங்களில் இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்ட உள்ளன. இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களில் இரண்டு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்கள் சரகங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த ரோந்து வாகனமானது, திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தில் உடனடி செய்தி பகிர்விற்கு வாக்கிடாக்கி சாதனத்துடனும், பொதுமக்களுக்கு அறிவிப்புகள் தெரிவிக்க Public Address System பொருத்தப்பட்டும், சைரன் ஒலிப்பான் மற்றும் ஒளிரும் நீல-சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டு, திருச்சி மாநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி ,கல்லூரி பகுதிகளிலும், மற்ற நேரங்களில் பெண்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்