பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை- ஜெயக்குமார் விளக்கம்…!
பாஜகவுடன் கூட்டணி வைத்து பட்டது போதும், இனி அவர்களுடன் கூட்டணி வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி வந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை ஏற்படுத்தி உள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி குறித்து சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழகத்தில் வாழும் மலையாள மக்களுக்கும் விஷு பண்டிகை வாழ்த்துகள். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை. நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. பதவிக்காக யார் வாசல் கதவையும் தட்டியது கிடையாது; பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது. என் குடும்பம்; உயிர் மூச்சு என்றால் அது அதிமுக தான். அதிமுக ஒரு மாபெரும் இயக்கம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா வழியில்தான் எங்களுடைய இயக்கம் பயணிக்கின்றது. அதில் நானும் தொடர்ந்து பயணிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.