Rock Fort Times
Online News

இபிஎஸ், சி.எம்.ஆகக் கூடாது என்பதற்காகவே திமுகவில் இணைந்தேன்…- ஓபிஎஸ் அதிரடி!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், 50 ஆண்டுகளுக்கு மேலாக அ.தி.மு.க.வில் உண்மையாக உழைத்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கட்சியை சிதறவிடாமல் வழி நடத்தினேன். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி ஆதரவு கோரிய நிலையில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதால் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஆனால், ஆட்சி முடிந்த பிறகு பொதுச் செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டு அதில் தன்னை எடப்பாடி பழனிசாமி அமர்த்தி கொண்டார். இது பெரும்பாலானோருக்கு பிடிக்காததால் எதிர்த்து குரல் கொடுத்த அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அ.தி.மு.க பிளவு படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தும் என்னை இயக்கத்தில் சேர்க்க மறுத்து விட்டார். என்னைப்போல பலரும் அங்கிருந்து வெளியேறி தாய்க்கழகமான தி.மு.க.வில் இணைய முடிவு செய்தோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் தாய் உள்ளத்துடன் ஏற்றுக்கொண்டார். இனி எந்த காலத்திலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க.வில் இணைந்தேன். எனது முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். வருகிற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. இருக்காது. எடப்பாடி பழனிசாமியும் தோற்றுப் போவார். மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியில் அமருவார்
என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்