Rock Fort Times
Online News

முதலமைச்சராக 2 முறை வாய்ப்பு கிடைத்தும் அதிமுக உடைந்துவிடக் கூடாது என விட்டுக் கொடுத்தவன் நான்- செங்கோட்டையன் ‘ஓப்பன் டாக்’…!

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும், இல்லையென்றால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கருத்து தெரிவித்து இருந்தார். அனைவரையும் ஒன்றிணைக்க 10 நாட்கள் அவகாசமும் அளித்திருந்தார். இதனை ஏற்க மறுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த கட்சி பதவிகளை பறித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.30) பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் கைகோர்த்ததால் நேற்று(அக்.31) அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது தொடர்பாக இன்று (நவ.1) விரிவாக பேசுகிறேன் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ” அதிமுகவிற்காக என்னை நான் அர்பணித்துக் கொண்டேன். கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னிடம் பேசினார். முதலமைச்சராக 2 முறை வாய்ப்பு கிடைத்தும் அதிமுக உடைந்துவிடக் கூடாது என விட்டுக்கொடுத்தேன். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது. பொதுச்செயலாளராக ஆன பிறகு ஒருமுறை கூட அதிமுக வெற்றி பெற முடியவில்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி தொடர்ந்து வலியுறுத்தினோம். நான் விதித்தது கெடு அல்ல. பேசி முடிவெடுக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். இந்த கருத்தை முன்வைத்ததும் உறுப்பினர் பொறுப்பு மட்டுமின்றி மற்ற பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டேன். என்னை திமுகவின் பி டீம் என்கிறார்கள். நான் திமுகவின் பி டீம் இல்லை. கட்சியில் இருந்து நீக்கியதால் உண்மையிலேயே மனவேதனை அடைகிறேன். கண்ணீர் சிந்துகிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்