Rock Fort Times
Online News

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்?

நாடாளுமன்றம் என்பது மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளை கொண்டது. மக்களவையில் 545 இடங்களும், மாநிலங்களவையில் 250 இடங்களும் உள்ளன. இதில், மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அந்தவகையில், தமிழ்நாட்டுக்கு மக்களவையில் 39 இடங்களும், மாநிலங்களவையில் 18 இடங்களும் உள்ளன. மக்களவை உறுப்பினர்களை பொதுமக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பது போல், மாநிலங்களவை உறுப்பினர்களை இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பார்கள். தற்போது, மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்த காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக முன்கூட்டியே, அதாவது ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 2 உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது, தி.மு.க.வில் வைகோ, அப்துல்லா, வில்சன், சண்முகம் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அதிமுகவில் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைகிறது. கடந்தமுறை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் பதவி காலமும் முடிவடைகிறது. திமுகவை பொறுத்தவரை வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் தரப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மற்ற இருவர் யார் என்று தெரியவில்லை. வைகோவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்றும் உறுதியாக தெரியவில்லை. அன்புமணி ராமதாஸ் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாததால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6 பேர் மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது. விண்ணப்பித்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் தேர்தல் நடைபெறும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்