டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!
டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் உற்பத்தி முதல் விற்பனை வரை என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, விற்பனையை கண்காணிக்க டாஸ்மாக் நிர்வாகம் டிஜிட்டல்மயமாகி உள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலும், செல்போன் வடிவலான கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்து அதன்பிறகே விற்கப்படுகிறது. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில், நேரடியாக கைகளில் பணம் பெறுவதை தவிர்த்து செல்போன் செயலி வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தினசரி கூட்டம் அதிகமுள்ள கடைகளில் அதிகபட்சமாக 40 சதவீதம் அளவிலும், குறைவான கூட்டம் இருக்கும் கடைகளில் 25 சதவீதம் அளவிலும் டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஆனால், சில ஊழியர்கள் இதனை பின்பற்றாமல் பணத்தை நேரடியாக கைகளில் பெறுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக
டிஜிட்டல் முறையில் பணம் வசூல் செய்வது 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்கும் மதுக்கடை ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு டாஸ்மாக் மேலாளர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீஸில், டிஜிட்டல் பண வசூல் குறைவாக இருப்பதால், உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இலக்கு நிர்ணயித்து டிஜிட்டல் முறையில் பணம் வசூல் செய்ய சொல்வது பணியாளர்கள் விரோத நடவடிக்கை என குற்றம்சாட்டி வருகின்றனர்.
Comments are closed.