ஹலோ சார்…எனக்கு கட்டாயம் திருமணம் செய்து வைக்க பார்க்கிறாங்க… அவசர எண் 100க்கு பறந்த இளம் பெண்ணின் “போன் கால்”…!
திருச்சி போலீஸ் அவசர எண் 100-க்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய இளம்பெண் ஒருவர், ஹலோ சார்…தான் திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியில் இருந்து பேசுவதாகவும், தனக்கு 20 வயது ஆவதாகவும், தனது பெற்றோர் எனது விருப்பம் இல்லாமல் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள துவாக்குடி போலீசாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் துவாக்குடி எஸ்ஐ நாகராஜன் மற்றும் சோஷியல் வெல்ஃபர் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதில், துவாக்குடி பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெற்றோர் மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது என பெற்றோரை போலீசார் எச்சரிக்கை செய்தனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் சமரசம் பேசி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். தனது சம்மதம் இல்லாமல் நடக்க இருந்த திருமணத்தை துணிச்சலாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய அப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Comments are closed.