Rock Fort Times
Online News

அதிமுகவையும், இரட்டை இலையையும் தன் சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகிறார் இபிஎஸ்- திருச்சியில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு…!

அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் வெல்லமண்டி நடராஜன். இவரது மனைவி சரோஜாதேவி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று(01-03-2025) வெல்லமண்டி நடராஜனின் இல்லத்திற்கு வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் தலைமையில் நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம்.
எங்கள் கட்சி சார்பில் துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் பங்கேற்பார். நாங்கள் பேரறிஞர் அண்ணாவின் வழி வந்தவர்கள்.
தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலமே போதும் என்கிற நிலை தான் உள்ளது. இருந்தபோதும் தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப விருப்பப்பட்டால் மூன்றாவது மொழியை படிக்கலாம். திமுக பொய் பிரச்சாரம் செய்வதுபோல் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. விருப்பப்படுபவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ளலாம் என தான் கூறியுள்ளது. மூன்றாவது மொழி வேண்டாம் என முதலமைச்சர் நினைத்தால் அவர் நேரடியாக பிரதமரை சந்தித்து இது குறித்து விளக்கலாம். அப்போது இது குறித்து விளக்கி கல்விக்கான நிதியை கேட்டால் தாய் உள்ளத்தோடு பிரதமர் வழங்குவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாறாக இதை விட்டுவிட்டு இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதை விரும்பவில்லை என நாங்கள் மத்திய அரசிடம் எடுத்துக் கூறினோம். அதனை கேட்டுக்கொண்ட மத்திய அரசு அந்த திட்டத்தை ரத்து செய்தது. அதேபோல, மும்மொழி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பிரதமரை சென்று பார்க்கட்டும். அதன்பின் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். திமுகவிற்கு பயந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அடக்கி வாசிக்கிறார். திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரட்டை இலையை தவறாக பயன்படுத்துகிறார். தன் சுயநலத்திற்காக அதிமுகவையும், இரட்டை இலையையும் கேடயமாக பயன்படுத்தி வருகிறார். மீண்டும் அதிமுக பிளவுபடுமா? என்பது குறித்து எனக்கு தெரியாது. ஜோசியம் எல்லாம் எனக்கு தெரியாது. நீதிமன்ற உத்தரவின் படி தான் சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவை யாராக இருந்தாலும் மதித்து தான் ஆகவேண்டும். தாத்தா என அழைக்க வேண்டிய வயதில் முதலமைச்சரை அப்பா என அழைப்பதால் அவர் மகிழ்ச்சி அடைகிறார் என்றார். பேட்டியின் போது திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்