Rock Fort Times
Online News

திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எச்.ராஜா கைது….

சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ( 11.09.2023 ) போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, திருச்சி மாநகர் மாவட்ட பாஜகவினர், கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையில் திரண்டனர். அங்கு போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், தடையை மீறி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர். உடனே போலீசார், எச்.ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறும்போது :

சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு கொசு போன்று ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது 80 சதவீத இந்திய மக்களை இனப்படுகொலை செய்வதற்கு ஒப்பானது. சனாதனத்தில் இருக்கும் நான்கு வர்ணங்களையும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவர் ஒரு சனாதனி. ஆனால் வைரமுத்து தவறான தகவலை சொல்கிறார். இன்றைக்கு சனாதனம் என்பது இல்லை. புராண காலத்தில் இருந்து வர்ணங்கள் மாறி திருமணங்கள் செய்திருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளும் ஆணவ கொலைகளும் திருமாவளவன், சுப வீர பாண்டியன் போன்றவர்கள் பிறந்த பின்னரே நடந்துள்ளது. திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். சனாதனம் என்பது மனிதர்கள் சார்ந்தது. ஆகவே, இனப்படுகொலை செய்வதாக கூறிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்