Rock Fort Times
Online News

“குட் லிஸ்டில்” உள்ள தலைமை ஆசிரியரை பழிவாங்கி விட்டார்கள்-அரசு பள்ளியை இழுத்து மூடிய மாணவர்களின் பெற்றோர்கள்…!( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பழைய பாளையத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி என இரண்டு பள்ளிகள் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நாகராஜன் ( 52 ) என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரையடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸார் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நித்திய கல்யாணிதான் காழ்ப்புணர்ச்சி காரணமாக துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தவறான தகவல் அளித்துள்ளார். இதன் காரணமாகவே குழந்தைகள் நல அமைப்பினர் தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி தலைமை ஆசிரியர் நாகராஜன் இதே ஊரில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி
பெற்றோர்களின் நன்மதிப்பை பெற்றவர் என்றும் அவர் எவ்வித தவறும் செய்திருக்க மாட்டார் என்று கூறி பழைய பாளையத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் உயர் நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்பாமல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் இரண்டு பள்ளிகளில் பயிலும் 164 மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் சவுந்தர்யா, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி, மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியும் பெற்றோர்களை சமாதானம் செய்ய இயலவில்லை. கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை விடுவிக்காத வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் உறுதிபட கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்