சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை- 2 பேர் கோர்ட் மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு…!
திருச்சி திருவானைக் காவல் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (22). இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (23), திருப்பதி (24).
கடந்த 16.8.2020 அன்று 3 பேரும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று(11-01-2024) தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் பசுபதி உள்பட 3 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் குற்றவாளிகள் 3 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் ஆயத்தமானார்கள். அப்போது பசுபதி, திருப்பதி ஆகிய இருவரும் கோர்ட் அமைந்துள்ள 2-வது மாடியிலிருந்து யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், காயமடைந்த அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 வாலிபர்கள் கோர்ட் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .
Comments are closed, but trackbacks and pingbacks are open.