நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் இயங்கி வந்த ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை சுஜாதா என்பவர் தனது குடும்பத்தினருடன் சவர்மா உள்ளிட்ட சில உணவு வகைகளை பார்சல் வாங்கி வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். சவர்மா சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவரது 9 ம் வகுப்பு படிக்கும் மகள் கலையரசி (வயது 14) மற்றும் உறவினர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிறுமி கலையரசி சிகிச்சை பலனின்றி நேற்று ( 18.09.2023 ) இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், ஹோட்டல் நடத்திய 3 பேரை கைது செய்தனர். மேலும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்ற உணவுகள் விற்பனை செய்ய தடை விதித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் உமா உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளை பின்பற்றி சரியான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவா? உணவுகளை பாதுகாக்க முறையான பிரீசர் வசதி உள்ளதா? என்று ஆய்வு செய்யவேண்டும். உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.