திருச்சி கிராப்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதி உள்ளது. இங்கு இரண்டு விடுதிகள் உள்ள நிலையில் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 120 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சென்று மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை என்று கூறப்படுகிறது. விடுதி வார்டனும், துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் மருத்துவக் கல்லூரி பயிலும் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் திருச்சி – மதுரை சாலையில் கிராப்பட்டி மேம்பாலத்தில் இன்று (5-11-2023) காலை வழங்கப்பட்ட தரமற்ற இட்லியுடன் பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் தரப்பில், தரமற்ற உணவுகளால் விடுதி மாணவர்கள் 3 பேர் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், இதுபோன்று மற்ற மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்குமாறு மாணவர்களை போலீசார் சமரசப்படுத்தினர். அதன்பேரில், ஆட்சியர் அலுவலகம் நோக்கி இட்லி குண்டாவை தூக்கிக் கொண்டு மாணவர்கள் பேரணியாக சென்றபோது ஆய்வாளர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.