தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு இன்று (பிப்.23) தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி, எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆகும். அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925, பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இப்போதும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

Comments are closed.