தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முக்கொம்பு மேலணையில் இன்று ( 26.10.2023 ) மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கர்நாடக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். முன்னதாக விவசாயிகள் காவிரி பாலத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநிலத் தலைவர் சின்னசாமி, மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.